Publish Date: Fri, 03 Oct 2008 (15:05 IST)
Updated Date: Fri, 03 Oct 2008 (15:02 IST)
வரும் ஜனவரி மாதத்தில் இக்னோ தொடங்கவுள்ள சமுதாய வானொலி குறித்த சான்றிதழ் படிப்பில் சேரும் 150 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று இக்னோ அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத் (இக்னோ) துணைவேந்தர் பேராசிரியர் வி.என். ராஜசேகரன் பிள்ளை, டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ஆசியாவுக்கான காமன்வெல்த் கல்வி ஊடக மையத்துடன் இணைந்து 'சமுதாய வானொலி' என்ற சான்றிதழ் படிப்பை இக்னோ தொடங்கவிருக்கிறது என்றார்.
வரும் 2009 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த சான்றிதழ் படிப்பு தொடங்கும் என்றும், இதில் சேரும் மாணவர்களில் 150 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பண்பலை (எப்.எம்.) வானொலியைப் போலவே சமுதாய வானொலியின் அமைப்பு, செயல்பாடுகள் இருக்கும் என்றும், புயல்- வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் அதன் பங்கு மகத்தானதாக இருக்கும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.