Publish Date: Wed, 01 Oct 2008 (11:41 IST)
Updated Date: Wed, 01 Oct 2008 (11:38 IST)
சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் கல்விக் கட்டணம் நிர்ணயித்து ராமன் குழு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை, தமிழக அரசு நியமனம் செய்த ராமன் குழு நிர்ணயம் செய்தது. இதன்படி கல்விக் கட்டணம் ரூ.2 1/4 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் இக்கட்டணம் குறைவாக இருப்பதாகவும், இதனால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், ரூ. 4 லட்சம் வரை கல்விக் கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி, சென்னை செட்டிநாடு, கோவை பி.எஸ்.ஜி., கன்னியாகுமரி தாய் மூகாம்பிகை மருத்துவக்கல்லூரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
ராமன் குழு நிர்ணயித்த கட்டணம் அதிகமாக உள்ளதாகக்கூறி மருத்துவக்கல்லூரி மாணவர்களின் பெற்றோர் மற்றும் இந்திய மாணவர்கள் சங்கம் ஆகியவை பதில் மனு தாக்கல் செய்தன.
இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர், நேற்று தீர்ப்பு அளித்தனர். 'சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை ராமன் குழு நிர்ணயித்தது சரியானது தான். இதில் எவ்வித சட்ட விரோத அம்சங்களும் காணப்படவில்லை. எனவே இக்குழு நிர்ணயித்த கல்விக் கட்டணம் செல்லும். இதுதொடர்பான மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன' என்று அதில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.