Publish Date: Tue, 30 Sep 2008 (13:31 IST)
Updated Date: Tue, 30 Sep 2008 (13:30 IST)
இந்திய தொழிலதிபர்கள், வல்லுனர்களின் வருகையை அதிகப்படுத்தும் வகையில் விசா கட்டுப்பாடுகளை ஐரோப்பிய யூனியன் எளிதாக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங் தற்போது பிரான்ஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். மார்செய்ல்ஸ் நகரில் நேற்று நடந்த இந்திய- ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டுக்குப் பிறகு, தலைநகர் பாரிஸில் இன்று நடைபெறும் இந்திய- பிரான்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கிறார்.
முன்னதாக நேற்று நடந்த மாநாட்டின்போது, விசா கட்டுப்பாடுகளை எளித்தாக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் நாடுகளை இந்தியா கேட்டுக் கொண்டது. இதன் மூலம் இந்திய வர்த்தகவர்கள், தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள், பணியாளர்கள், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்துப் பேசிய ஐரோப்பிய ஆணையத் தலைவர் மானுவல் பரோசோ, இந்தியர்கள் சந்திக்கும் விசா நெருக்கடிகளை ஐரோப்பிய யூனியன் புரிந்து கொண்டிருப்பதாகவும், அமெரிக்காவில் உள்ள 'கிரீன் கார்ட்' திட்டம் போல் ஐரோப்பிய யூனியன் நாடுகள் 'ப்ளூ கார்ட்' திட்டம் பற்றி யோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவு அமைச்சகச் செயலாளர் (மேற்கு) நளினி சூரி, இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐரோப்பிய நாடுகளில் சட்ட விரோதமாகக் குடியமர்வோர் குறித்து ஐ.யூ. தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. அவர்களை திரும்ப அழைக்கத் தேவையான நடவடிக்கையை எடுப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது என்றார்.
ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குச் செல்லும் இந்தியர் பயன் பெறும் வகையில் இந்தியா- பிரான்ஸ் இடையே சமுக பாதுகாப்பு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக விருப்பதாக நளினி சூரி மேலும் தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Tue, 30 Sep 2008 (13:31 IST)
Updated Date: Tue, 30 Sep 2008 (13:30 IST)