Publish Date: Fri, 26 Sep 2008 (15:44 IST)
Updated Date: Fri, 26 Sep 2008 (15:31 IST)
இந்திய மாணவர்களின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் கல்வி விசா மூலம் பிரிட்டன் செல்லும் மாணவர்களுக்கு 2 ஆண்டு பணி விசாவை அளிக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு வரை இத்திட்டம் ஸ்காட்லாந்தில் மட்டுமே அமலில் இருந்து வந்த நிலையில், இந்திய மாணவர்களின் நலன் கருதி பிரிட்டன் முழுவதற்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.
இதுகுறித்து பிரிட்டிஷ் துணை தூரக கல்வித்துறை தலைவர் எல். தனசேகரன் கூறுகையில், "பிரிட்டனில் பட்டப் படிப்பு, முதுநிலை டிப்ளமோ, முதுநிலைப் பட்டப் படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் இந்திய மாணவர்கள், தங்கள் படிப்புக் காலம் முடிந்த பின், தங்கள் கல்வி விசாவை பணி விசாவாக நீட்டித்துக் கொள்ளலாம்" என்றார்.
இதற்காக மாணவர்கள் தங்களின் வங்கிக் கணக்கில் 800 பிரிட்டன் பவுண்ட் தொகையை இருப்பு வைத்திருக்க வேண்டும். படிப்பு முடித்தபின் வேலை கிடைக்கும் வரை மாணவர்களுக்கு இத்தொகை பயனுள்ளதாக இருக்கும் என்றார் தனசேகரன்.
இந்திய மாணவர்கள் அறிவியல், பயோ டெக்னாலஜி, பயோஇன்பர்மேடிக்ஸ், மைக்ரோ பயாலஜி, வணிக நிர்வாகம், நிதி, விளையாட்டு அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் ஆரிவம் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.