Publish Date: Wed, 24 Sep 2008 (18:11 IST)
Updated Date: Wed, 24 Sep 2008 (18:10 IST)
பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் போதிய முன்னுரிமை தர வேண்டும் என்று, அனைத்து பட்டதாரிகள் நல பாதுகாப்புச் சங்கம் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் ராஜு, முதலமைச்சர் கருணாநிதிக்கு மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தற்போது 7500 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான 'சரிபார்க்கும் பணிகள்' நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 383 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் 3800 தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறியதை சுட்டிக் காட்டியுள்ள அவர், இந்த விஷயத்தில் அரசு மெத்தனக் காட்டக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டால் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி தங்கள் அமைப்பின் சார்பில் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று ராஜு மேலும் தெரிவித்துள்ளார்.