Publish Date: Sat, 26 Jul 2008 (13:54 IST)
Updated Date: Sat, 26 Jul 2008 (13:54 IST)
வக்பு வாரியத்தில் தற்காலிக இளநிலை உதவியாளர் பணிக்கான பதிவு மூப்பை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 29 ஆம் தேதி சரிபார்க்கலாம் என்று தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) பாலசுந்தரம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை நிர்வாக அலுவலரால் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக இளநிலை உதவியாளர் பணிக்காலியிடங்களுக்கு மாநில அளவில் உத்தேச பதிவு மூப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 31.12.1997 வரை பதிவு செய்தவர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இந்த பதிவு மூப்பிற்குள் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் வரும் 29ஆம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை உரிய ஆவணங்களுடன் நேரில் தொடர்பு கொண்டு தங்களது பரிந்துரையினை உறுதி செய்து கொள்ளலாம்.
இதேபோல், சென்னை கால்நடை பராமரிப்பு, மருத்துவ பணிகள் ஆணையரால் அறிவிக்கப்பட்டுள்ள கால்நடை ஆய்வாளர் பணி காலியிடத்திற்கு மாநில அளவில் உத்தேச பதிவு மூப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.
இதில் இஸ்லாம் வகுப்பினரில் முன்னுரிமையற்றோர், பொது பிரிவினருக்கு 31.12.1994 வரை பதிவு செய்தவர்களும், முன்னுரிமையுடையோர் பொது பிரிவினரில் 31.3.2008 வரை பதிவு செய்தவர்களும், மிகவும் பிற்பட்ட வகுப்பினரில் முன்னுரிமையற்றோர் பொது பிரிவினரில் 30.6.1989 வரை பதிவு செய்தவர்களும் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இந்த பதிவு மூப்பிற்குள் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் வருகிற 28ஆம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை உரிய ஆவணங்களுடன் நேரில் தொடர்பு கொண்டு தங்களது பரிந்துரையினை உறுதி செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.