Publish Date: Mon, 14 Jul 2008 (12:12 IST)
Updated Date: Mon, 14 Jul 2008 (12:12 IST)
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக தொலைநிலை கல்வி மூலம் பி.எட். படிப்பை நடத்தி வருகிறது.
தமிழ்வழி பி.எட். படிப்புக்கு 500 இடங்களும், ஆங்கில வழி பி.எட். படிப்புக்கு 500 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
தமிழ்வழியிலான பி.எட். படிப்புக்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டு முடிக்கப்பட்டது. இதற்கான நுழைவுத்தேர்வு வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஆங்கிலவழி பி.எட். படிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் திங்கட்கிழமை முதல் வழங்கப்பட உள்ளன. விண்ணப்ப கட்டணம் ரூ.500.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திலும் (தொழில்நுட்பக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகம்) வெவ்வேறு இடங்களில் உள்ள அதன் கல்வி மையங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை செப்டம்பர் 19-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கான நுழைவுத்தேர்வு அக்டோபர் மாதம் 12-ந்தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.