Publish Date: Sat, 05 Jul 2008 (12:36 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (22:50 IST)
சென்னை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு ஐ.டி.ஐ.க்கள் மூலம் இலவசமாக தொழில்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் சேருவதற்கான சிறப்பு முகாம் கிண்டியில் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு ஐ.டி.ஐ.க்களில் மாலைநேரத்தில் இலவசமாக தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாவட்டத்தில் கிண்டி மற்றும் திருவான்மியூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையங்களில் டி.டி.பி. ஆபரேட்டர், எம்.எஸ். ஆபீஸ், குளிர்சாதன பெட்டி மற்றும் ஏ.சி. மெக்கானிக், டி.வி. சர்வீஸ், தையல் பயிற்சி, பிட்டர், வெல்டர், எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் அப்ளையன்சஸ், நான்கு சக்கர வாகன பழுதுபார்த்தல் உள்பட பல்வேறு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.
பயிற்சி காலம் 2 மாதம் முதல் 3 மாதங்கள் வரை இருக்கும். 5ஆம் வகுப்பு முதல் பிளஸ்2 முடித்தவர்கள் என்று ஒவ்வொரு கல்வித்தகுதிக்கும் பயிற்சிகள் உள்ளன. பயிற்சி பெற வயது வரம்பு 45 ஆகும். ஆதி திராவிடர், பழங்குடியினர் என்றால் 45 வயது வரை சேரலாம். பயிற்சியில் சேர எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.
பயிற்சி முற்றிலும் இலவசம். பயிற்சிக்கான ஆள்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) 8ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். முகாமிற்கு வருவோர் தங்களின் அனைத்து கல்விச்சான்றிதழ்களையும் எடுத்துவர வேண்டும். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த இலவச பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்'' என்று ஆட்சியர் காகர்லா உஷா கூறி உள்ளார்.
Webdunia
Publish Date: Sat, 05 Jul 2008 (12:36 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (22:50 IST)