Publish Date: Mon, 30 Jun 2008 (15:18 IST)
Updated Date: Mon, 30 Jun 2008 (15:18 IST)
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் வரும் ஜூலை 4-ம் தேதி காலை 9 மணிக்கு சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,483 மருத்துவ இடங்கள் உள்ளன. இதில் ஊனமுற்றோருக்கு 44 மருத்துவ இடங்கள் (3 சதவீதம்), முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு 2 இடங்கள் (பிடிஎஸ் படிப்பில் தனியாக ஒரு இடம்), விளையாட்டுகளில் சிறந்து விளங்குவோருக்கு 3 இடங்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 2 இடங்கள் என சிறப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்படுகிறது.
பொதுப் பிரிவினரைப் போன்று சிறப்புப் பிரிவுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களும் அதிக மதிப்பெண் எடுத்துள்ளனர்.
அதாவது மருத்துவம் பயில விண்ணப்பித்திருக்கும் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினரில் சில மாணவர்கள் 200-க்கு 199 மதிப்பெண் வாங்கியுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் வரும் ஜூலை 4-ம் தேதி காலை 9 மணிக்கு, மேலே குறிப்பிடப்பட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஊனமுற்றோர் பிரிவில் மருத்துவத்தில் சேர மொத்தம் 22 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மருத்துவம் கிடைத்து விடும். மீதமுள்ள 22 காலியிடங்கள் பொதுப் பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இட ஒதுக்கீட்டு அடிப்படையில் சேர்க்கப்படும்.
முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள் என்ற தகுதி அடிப்படையில் விண்ணப்பித்தவர்களில், மொத்தம் 153 மாணவர்கள் சிறப்புப் பிரிவு தகுதியைப் பெற்றுள்ளனர். எனினும் இந்தப் பிரிவில் 2 மருத்துவ இடங்கள் மட்டுமே உள்ளதால், 25 பேர் மட்டுமே கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.