Publish Date: Thu, 26 Jun 2008 (12:46 IST)
Updated Date: Thu, 26 Jun 2008 (12:46 IST)
சென்னையில் முதன்முறையாக சுற்றுலா மற்றும் கல்வி கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது என்று சுற்றுலா துறை செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்தார்.
இது குறித்து சென்னையில் அவர் பேசுகையில், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அவர்களுக்கு கல்வி தொடர்பான அறிவுரைகளை வழங்குவதற்காகவும் சுற்றுலா மற்றும் கல்வி கண்காட்சி 2008, சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், `ஸ்பெல் பவுண்ட்' நிறுவனத்துடன் இணைந்து இந்த கண்காட்சியை நடத்துகிறது. நாளை மாலை 4 மணிக்கு துவக்க விழா நடக்கிறது. ஜுலை மாதம் 6-ந்தேதி வரை கண்காட்சி நடைபெறும்.
இந்த கண்காட்சியில் 75 ஸ்டால்கள் இடம்பெறுகின்றன. மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்துதல், ஞாபகசக்தியை அதிகரிக்கும் வழிகள், கல்வி கற்கும் திறனை மிகைப்படுத்துதல், மெதுவாகப் புரிந்து கொள்ளும் மாணவர்களுக்கு கல்வி நிபுணர்களைக் கொண்டு ஆலோசனை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாணவர்கள் தனிப்பட்ட முறையில் ஆலோசனை பெற விரும்பினால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
என்ஜினீயரிங், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், சிவில் சர்வீஸ், புதிய பாடப்பிரிவுகள், புதிய துறைகள், அஞ்சல்வழி பாடங்கள், பன்னாட்டு படிப்புகள், சமையல்கலை, விருந்தோம்பல், ராணுவம், காவல்துறை, சுற்றுலா, உணவக தொழில்கள் ஆகியவற்றில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றி கல்வி நிபுணர்கள் உரையாற்றுகின்றனர்.
கல்விக் கடன் பற்றி இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் விளக்கம் அளிக்கிறார்கள். மாணவர்களின் ரத்த வகை கண்டறிவதுடன், கண் மற்றும் பல் மருத்துவ பரிசோதனையும் இலவசமாக நடத்தப்பட உள்ளது.
வார நாட்களில் பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கண்காட்சியை பார்வையிடலாம். நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 10 ரூபாயும், சிறியவர்களுக்கு (8-ம் வகுப்பு வரை) 5 ரூபாயும் வசூலிக்கப்படும். 30 மாணவர்களுக்கு மேல் குழுக்களாக வருபவர்களுக்கு ஒருவருக்கு ரூ.3 வீதம் சலுகைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று வெ.இறையன்பு கூறினார்.