Publish Date: Thu, 13 Mar 2008 (10:19 IST)
Updated Date: Thu, 13 Mar 2008 (10:19 IST)
அரசு பள்ளிகளில் மேலும் 2,020 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கண்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு ஆரம்ப பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணி இடங்கள், பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மேலும் ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் பணி இடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இடைநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையிலும் தேர்வுசெய்யப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள்.
அரசு மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளில் 1,398 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் உள்பட 854 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் விரைவில் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான பதிவுமூப்பு பட்டியலை சென்னை சாந்தோமில் உள்ள மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டிருக்கிறது. இந்த மாத இறுதியில் பதிவுமூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுவிடும்.
அரசு பள்ளிகளில் புதிதாக மேலும் 2,020 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், வரலாறு, புவியியல் உள்பட பாடவாரியான பதிவுமூப்பு பட்டியல் விரைவில் தயாரிக்கப்படும்.
இதுவரை ஒரு காலி இடத்திற்கு ஒருவர் மட்டுமே வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு வந்தனர். அரசின் புதிய உத்தரவுப்படி பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஒரு காலி இடத்திற்கு 5 பேர்களின் பெயர் பரிந்துரை செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.