Publish Date: Fri, 07 Mar 2008 (10:54 IST)
Updated Date: Fri, 07 Mar 2008 (10:50 IST)
''கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதித்தேர்வு (நெட்) ஜூன் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு மே 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்'' என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்து உள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியில் சேர எம்.பில். முடித்திருக்க வேண்டும். அல்லது ஸ்லெட், நெட் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாநில அளவில் நடத்தப்படும் ஸ்லெட் தேர்வில் வெற்றிபெற்றால் குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டுமே பணிபுரியலாம். ஆனால், பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) நடத்துகிற நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியில் சேரலாம்.
நெட் தேர்வு ஆண்டுக்கு 2 முறை (ஜூன், டிசம்பர்) நடத்தப்படுகிறது. கலை மற்றும் அறிவியல் பாடங்களில் பட்டமேற்படிப்பு முடித்திருப்பவர்கள் தேர்வு எழுத தகுதியுடையவராவர். குறைந்தபட்சம் 55 விழுக்காடு மதிப்பெண் தேவை. ஆதி திராவிடர், பழங்குடியினர், உடல் ஊனமுற்றோர், 19.9.1991-க்கு முன்னர் பி.எச்டி. படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் என்றால் 50 விழுக்காடு மதிப்பெண் போதுமானது. நெட் தேர்வு எழுத வயது வரம்பு ஏதும் இல்லை.
ஆனால், இதனுடன் சேர்த்து ஜே.ஆர்.எப். என்று சொல்லப்படும் ஜூனியர் ரிசர்ச் பெலோஷிப் தகுதி பெற வயது 28-க்குள் இருக்க வேண்டும். ஆதி திராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.), உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
2008ஆம் ஆண்டுக்கான முதலாவது நெட் தேர்வு ஜூன் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. தகுதியுடைய மாணவர்கள் சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்-இவற்றில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு கட்டணம் ரூ.450. ஓ.பி.சி. வகுப்பினருக்கு ரூ.225. ஆதி திராவிடர், பழங்குடியினர், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு ரூ.110. தேர்வுக்கட்டணத்தை செயலாளர், பல்கலைக்கழக மானியக்குழு, டெல்லி என்ற பெயருக்கு ஏதேனும் அரசுடைமை வங்கியில் டிமாண்ட் டிராப்டாக எடுக்க வேண்டும்.
தேர்வு பற்றிய முழு விவரம், பாடத்திட்டம், மாதிரி விண்ணப்ப படிவம் ஆகியவை யு.ஜி.சி. இணையதளத்தில் (www.ugc.ac.in) வெளியிடப்பட்டு இருக்கிறது. பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தின் 2 மாதிரிகளை தேர்வு எழுத விரும்பும் பல்கலைக்கழக மையத்திற்கு மே 2ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று யு.ஜி.சி. அறிவித்து உள்ளது