Publish Date: Wed, 20 Feb 2008 (10:39 IST)
Updated Date: Wed, 20 Feb 2008 (10:05 IST)
தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற வேண்டுமானால் ஊனமுற்றோர்கள் பிப்ரவரி 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தகவல் தொழில்நுட்பத் துறையில் கணினியை இயக்கும் பயிற்சியைப் பெற்ற ஊனமுற்ற நபர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. தனியார் நிறுவனங்களும் தகுதி வாய்ந்த ஊனமுற்ற நபர்களை பணிக்கு தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
அந்த வகையில் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் இயங்கும் கணினியில் தகவல்களை சேகரிக்கும் தனியார் நிறுவனம் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆங்கில தட்டச்சில் ஓரளவிற்கு பயிற்சி பெற்ற உடல் ஊனமுற்ற நபர்கள் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கு ரூ.2 ஆயிரம் மாதாந்திர உதவித் தொகை அளித்து இலவசமாக ஒரு மாதம் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது.
பயிற்சிக்கு பின்னர் அந்த நிறுவனத்திலேயே தொடக்கத்தில் குறைந்த பட்சம் ரூ.3 ஆயிரம் மாத ஊதியம் வழங்கப்படும். திறமைக்கேற்ப ஊதியம் அதிகரிக்கப்படும். எனவே விருப்பமுள்ள ஊனமுற்ற நபர்கள் அடையாளஅட்டை, கல்விச் சான்றிதழ், பயிற்சிச்சான்றிதழ் மற்றும் அனுபவச் சான்றிதழுடன் சென்னை மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர், வனத்துறை பாதுகாவலர் அலுவலக கட்டிடம், டி.எம்.எஸ். அலுவலக வளாகம், சென்னை-6 என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரிலோ 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.