Publish Date: Sat, 15 Dec 2007 (10:52 IST)
Updated Date: Sat, 15 Dec 2007 (10:52 IST)
ஈரோடு கல்வி மாவட்டத்தில் இந்த கல்வி ஆண்டில் 22 ஆயிரத்து 500 மாணவ, மாணவியர் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்.
தமிழகம் முழுவதும் மார்ச் 3ம் தேதி பனிரெண்டாம் வகுப்பு தேர்வு துவங்குகிறது. ஈரோடு கல்வி மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு மையங்களை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடந்தது.
முதன்மை கல்வி அலுவலர் ராமராஜ் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் மங்களம் முன்னிலை வகித்தார்.
முதன்மைக் கல்வி அலுவலர் ராமராஜ் பேசியதாவது: மார்ச் 3ம் தேதி ப்ளஸ் 2 தேர்வு துவங்குகிறது. ஈரோடு கல்வி மாவட்டத்தில் 183 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 59 பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்கப்பட உள்ளது.
வரும் கல்வி ஆண்டில் ப்ளஸ் 2 தேர்வில் ஈரோடு கல்வி மாவட்டத்தில் மொத்தம் 22 ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.
நபார்டு வங்கி உதவியுடன் ரூ. 32 கோடி மதிப்பீட்டில் ஈரோடு மாவட்ட பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன. முதற்கட்டமாக ரூ. 15.2 கோடி மதிப்பில் 27 பள்ளிகளில் 314 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த வகுப்பறைகள் வரும் 29ம் தேதி நடக்கும் மாநகராட்சி துவக்க விழாவின் போது முதல்வரால் திறந்து வைக்கப்படும்.
சிறந்த மதிப்பெண் பெறும் பிற்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இன மாணவ, மாணவிகளுக்க, கல்வி காலம் முடிவும் வரை அவர்களுக்கு அரசு நிதி உதவி வழங்குகிறது. சென்ற கல்வி ஆண்டில் சிறந்த மதிப்பெண் பெற்ற 10 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஈரோடு கல்வி மாவட்டத்தில் ஏழு பள்ளிகளில் அறிவியல் ஆய்வகம் உள்ளது.
மேலும், தளவாய்பட்டி மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆய்வகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இந்த கல்வி ஆண்டில் ரூ. 2.77 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். ப்ளஸ் 2 தேர்வின் போது வினாத்தாள்களை எவ்வாறு பாதுக்காக்க வேண்டும்.
தேர்வு மையங்களை எவ்வாறு தயார் படுத்த வேண்டும், பறக்கும் படை ஏற்படுத்துவது போன்றவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
Webdunia
Publish Date: Sat, 15 Dec 2007 (10:52 IST)
Updated Date: Sat, 15 Dec 2007 (10:52 IST)