Publish Date: Tue, 03 Jul 2007 (15:04 IST)
Updated Date: Tue, 03 Jul 2007 (14:43 IST)
மேலாண்மை கல்வியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று முன்னாள் துணை வேந்தர் கருத்து கூறியுள்ளார்.
திருச்சி ஐசிஎஃப்ஏஐ தேசிய கல்லூரியில் சிறந்த வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தரக்கூடிய எம்.பி.ஏ. கல்வி பற்றிய கருத்தரங்கில், பாரதிதாசன் மற்றும் சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் ஏ.ஞானம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது.
கடந்த 1990ம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட புதிய பொருளாதார கொள்கையால் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது குறிப்பிட்ட துறையில் மட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்பத் துறை உள்பட பல துறைகளில் வேலை வாய்ப்பு பெருகி உள்ளது. வேலை வாய்ப்பு பெறக்கூடியத் திறன், வளாக நேர்முகத் தேர்வு போன்றவையே இந்த வாய்ப்பு அதிகரித்து உள்ளதற்கு காரணமாகும்.
எனவே மாணவர்களிடையே வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத்த வேண்டும். மேலாண்மைக் கல்வியில் இன்னமும் கூட பாடத்திட்டங்கள் பழைய முறையில் தான் உள்ளன. இதில் காலத்துக்கு ஏற்றவாறு மாற்றம் செய்ய வேண்டும்.
நம் நாட்டில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை தற்போது 7 சதவீதமாக உள்ளது. கடந்த 1952-53ம் ஆண்டுகளில் இது ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்தது. தற்போதுள்ள 7 சதவீதத்தை 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் ஏறத்தாழ இருமடங்காக 15 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் உலக அளவில் கல்வி கற்போரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் நமது நாட்டில் குறைவாகத் தான் உள்ளது. மேலாண்மை கல்வி என்பது ஆய்வுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று ஏ.ஞானம் பேசினார்.