Newsworld Career News 0705 11 1070511007_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாடுகளைச் சுற்றி

Advertiesment
உலகம்

Webdunia

உலகத்தைப் பற்றிய பொதுவான பொருளாதார நடைமுறைகள் என்ன? உலகளாவிய அமைப்புகளில் உள்ள நாடுகள் எவை? அந்த அமைப்புகள் எந்த வகையில் உலக அரங்கில் பெயர் பெற்று திகழ்கின்றன என்ற விவரங்களை போட்டித் தேர்விற்குச் செல்லும் வேலை தேடும் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நேர்காணலிலும் இந்த அமைப்புகள் சார்ந்த வினாக்கள் கேட்கப்படுகின்றன.

அந்த முறையில் பின்வரும் அமைப்புகள் எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதைப் பார்ப்போம்.

G-7 உலகத்தில் செல்வச் செழிப்புமிக்க முன்னணி நாடுகள் தங்களுக்குள் ஓர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டன. அந்த அமைப்பு தற்போது ஜி8 என பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

G-8 உலகிலேயே பணக்கார நாடுகளின் அமைப்பாக ஜி8 திகழ்கிறது. ஜி7 ஆக 1997 வரை இருந்த போது இதில் உறுப்பினராக இருந்த நாடுகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, கனடா ஆகியவை.

1997 ஜூன் 21 அன்று அமெரிக்காவின் டென்வர் நகரத்தில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் ரஷ்யா இதில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அதற்கு பிறகுதான் அதன் பெயர் ஜி8 என்று மாற்றியமைக்கப்பட்டது.

உலக நாடுகளின் பொருளியல் சார்ந்த பல்வேறு விஷயங்களையும், அரசியல் சிக்கல்களையும் இந்த குழு ஒவ்வோர் ஆண்டும் ஓரிடத்தில் கூடி விவாதிக்கும்.

இதற்கு முந்திய ஜி8 உச்சிமாநாடு ரஷ்யாவில் பீட்டர்ஸ்பெர்க் நகரில் 2006 ஜூலை 15-17 வரை நடைபெற்றது. இதில் உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டு வரும் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்கள் ஆகியவை ஆழமாக விவாதிக்கப்பட்டன.

இந்த ஜி8 அமைப்பில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், முன்னணி நாடுகள் அல்லது அண்டை நாடுகள் என்ற நிலையில் சீனா, இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ, கசகசத்தான் ஆகிய நாடுகளும் இந்த உச்சி மாநாட்டிற்கு அழைக்கப்பட்டன. இந்தியாவின் சார்பில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இதில் கலந்து கொண்டார்.

G-15- என்பது வளரும் நாடுகளின் அமைப்பாகும். ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் குறிப்பாக பொருளியலில் வளரும் நாடுகளாக அடையாளப்படுத்தப்பட்ட நாடுகள் இதில் உறுப்பினராக உள்ளன. இந்த அமைப்பு 1990ம் ஆண்டில் மலேசியாவில் உருவாக்கப்பட்டது. தற்போது இந்த ஜி15 அமைப்பில் 18 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

அவை வருமாறு அல்ஜிரியா, அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், ஜமைக்கா, கென்யா, மலேசியா, மெக்சிகோ, நைஜிரியா, பெரு, செனகல், வெனிசுலா, யுகோஸ்லேவியா, ஜிம்பாபே.

ழு-20-இந்த அமைப்பு ஜி8-ன் நீட்சி என்று சொல்லலாம். இது புதிதாக ஏற்படுத்தப்பட்டது. ஏற்கனவே ஜி8ல் உறுப்பினராக உள்ள 8 நாடுகளையும் உள்ளிட்டு மொத்தம் 20 நாடுகள் இதில் பங்கு வகிக்கின்றன. உலகத்தின் முக்கியமான பொருளியல் சிக்கல்களைப் பற்றி விவாதித்து உலகப் பொருளாதாரத்தை வழிநடத்த இந்த அமைப்பு தன்னுடைய ஆலோசனைகளைத் தருகிறது.

வேகமாக வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையைக் கருத்தில் கொண்டு இந்தியா இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 2001-நவம்பர் மாதத்தில் கனடாவில் ஓடோவா நகரில் இந்த ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. பயங்கரவாதத்திற்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தீர்மானத்தை இது முன்மொழிந்தது. ஏனென்றால் பல நாடுகள் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து தங்களுடைய எதிரி நாடுகளை திண்டாட வைக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றன. அவற்றைத் தடுத்து பயங்கரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்கம் செய்ய வேண்டுமென்று இந்த ஜி20 அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.

புதுதில்லியில் 2005 மார்ச் 18-19 ஆகிய நாள்களில் ஜி20 நாடுகளின் மாநாடு நடைபெற்றது. அப்போது ஜி20 அமைப்பில் 21வது உறுப்பினராக உருகுவே சேர்த்துக் கொள்ளப்பட்டது.

GROUP OF 77: ஜி77 என்பது கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் அமைப்பாகும். 3ம் உலக நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பு 1964ல் ஏற்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகளின் அவையின் ஆதரவு பெற்ற இந்த அமைப்பு வளரும் நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. ஜி77 அமைப்பில் தற்போது மொத்தம் 130 வளரும் நாடுகள் உள்ளன. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்க நாடுகள் இதில் பங்கு பெற்றுள்ளன. கடைசியாக இதில் சேர்த்துக் கொள்ளப்பட்ட நாடு தென்னாப்பிரிக்கா. 1994 ஜூன் மாதத்தில் தென்னாப்பிரிக்கா இதில் சேர்க்கப்பட்டது.

இதுபோன்று பல அமைப்புகள் மற்றும் அவற்றின் பணிகளைப் பற்றி தெரிந்துக் கொண்டு அவ்வப்போது அவற்றின் செயல்பாடுகளை அறிந்து கொண்டேமென்றால் வங்கிப் பணிகள், ரயில்வே, ஆயுள் காப்பீடு போன்ற துறைகளுக்கான அதிகாரி பதவிகளுக்கு நேர்காணலின் போது இந்த விவரங்கள் உங்களுக்கு கைக் கொடுக்கும். பன்னாட்டு உறவுகளைப் பற்றியும் பொருளாதார நிலையில் மேற்கொள்ளப்படும் பல நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள் பற்றியும் அறிந்துக் கொள்வது அவசியம். இவற்றின் மூலம் நம் நாட்டைப் பற்றியும் அதனுடைய வளர்ச்சி நிலைகளைப் பற்றியும் அறிந்துக் கொண்டு போட்டித் தேர்வுகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil