Publish Date: Tue, 30 Dec 2008 (19:27 IST)
Updated Date: Tue, 30 Dec 2008 (19:27 IST)
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பள்ளி படிப்பை இடையில் நிறுத்தியவர்களுக்கு 4 வகையான புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
இதுகுறித்து தொலைநெறி தொடர்கல்வி இயக்கக இயக்குநர் பால்ராஜ் ஜோசப் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்ககம் சார்பில் 2008-09ஆம் கல்வியாண்டில் பி.ஏ., பி.லிட்., பி.எஸ்.சி., பி.பி.ஏ., பி.காம்., பி.எல்.ஐ.எஸ்.சி., மற்றும் அப்சல் உல் உல்லாமா (அரபிக்), எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்.சி., எம்.பி.ஏ., மற்றும் இதர பட்டய சான்றிதழ் வகுப்புகளுக்கான சேர்க்கை நாளை (31ம் தேதி) வரை நடக்கிறது.
இந்த கல்வியாண்டு முதல் எம்.பி.ஏ. இரண்டு ஆண்டு பட்ட மேற்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் சேர்வதற்கு நுழைவு கட்டணம் கிடையாது. வருடாந்திர கட்டணம் ரூ. 9,500இல் இருந்து ரூ. 7,500ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் தொலைநெறி தொடர்கல்வி இயக்ககத்தில் இளங்கலை, முதுகலை பயிலுகின்ற மாணவர்கள் கூடுதலாக சான்றிதழ் மற்றும் பட்டய படிப்புகள் பயில விரும்புகின்ற மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகைகள் வழங்கவும் துணைவேந்தர் சபாபதி மோகன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பள்ளி படிப்பை இடையில் நிறுத்தியவர்களுக்கு 4 வகையான புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்களை ரூ.100 செலுத்தி தொலைநெறி தொடர் கல்வி இயக்ககம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகம், நெல்லை-12 மற்றும் நாகர்கோவில் கல்வி மையம், தென் திருவாங்கூர் இந்து கல்லூரி வளாகம், நாகர்கோவில் என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
தபாலில் விண்ணப்ப படிவம் பெற பதிவாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நெல்லை என்ற பெயரில் ரூ. 125க்கு வங்கி வரைவோலை எடுத்து இயக்குநர், தொலைநெறி தொடர்கல்வி இயக்ககம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நெல்லை-12 என்ற முகவரிக்கு வேண்டுதல் கடிதத்துடன் அனுப்பி பெற்று கொள்ளலாம்.
ரூ. 100க்கான வங்கி வரைவோலை கொடுத்து பாளை சாப்டர் வளாகத்திலும் விண்ணப்பங்களை பெறலாம்" என்று கூறப்பட்டுள்ளது.