Publish Date: Tue, 23 Dec 2008 (18:13 IST)
Updated Date: Tue, 23 Dec 2008 (18:12 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும் இளநிலை, முதுநிலை தமிழ் படிப்புக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்க உள்ளது.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய தஞ்சை பல்கலைக் கழக துணை வேந்தர் எம். ராஜேந்திரன் கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தமிழ் துறை தலைவர்களுடன் ஆலோசனை செய்த பிறகு இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றார்.
தமிழ்நாட்டில் இளநிலை மற்றும் முதுநிலை அளவில் தமிழ் படிப்புக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டதைக் கொண்டுவர மாநில உயர்கல்வித் துறை முடிவெடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிக்காக அயல்நாடுகளில் இருந்து தமிழ் ஆசிரியர்கள் இப்பல்கலைக் கழகத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாக குறிப்பிட்ட அவர், முதற்கட்டமாக சிங்கப்பூரில் இருந்து 100 தமிழ் ஆசிரியர்களும் இதனையடுத்து 2-வது கட்டமாக மலேசியாவில் இருந்து ஆசிரியர்கள் வர உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.