Publish Date: Wed, 17 Dec 2008 (15:59 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை வால்டாக்ஸ் சாலை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில், சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் செலவில் ஆங்கில மொழிப்பயிற்சி வகுப்புகளை மேயர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், மாநகராட்சி கல்வித்துறை சார்பில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் 6, 7, 8ஆம் வகுப்பு பயிலும் 4 ஆயிரம் மாணவர்களுக்கும், 500 ஆசிரியர்களுக்கும் ஆங்கில மொழிப் பயிற்சி வழங்கப்படவுள்ளது என்றார்.
இப்பயிற்சியின் கீழ் நாள்தோறும் ஒரு மணி நேரம் வீதம் வாரத்துக்கு 5 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும். ஒரு குழுவுக்கு 50 மாணவர்கள் வீதம் 80 குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
மேலும், மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இதய அறுவைச் சிகிச்சைக்காக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.