Publish Date: Sat, 06 Dec 2008 (11:57 IST)
Updated Date: Sat, 06 Dec 2008 (11:56 IST)
தமிழகத்தில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் சிறுபான்மை இன இளைஞர்களுக்கு கணினி படிப்பில் திறன் வளர்ச்சி பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை வருகிற 15 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வாசுகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம், அனைத்து மாவட்டங்களிலும் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் சிறுபான்மை இன இளைஞர்களுக்கு கணினி படிப்பில் திறன் வளர்ச்சி பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இதில் கணின் ஹார்டுவேர் மற்றும் நெட்வொர்க், டி.டி.பி., எம்.எஸ்.ஆபீஸ் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. இதற்கான கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி, மேற்படிப்பு படித்தவர்களாக இருக்கவேண்டும்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் 1,000 பேருக்கும், திண்டுக்கல், சேலம், நாமக்கல், தேனி, சிவகங்கை, கரூர், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் 5,980 பேருக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட இருக்கின்றன.
பயிற்சியில் சேருபவர்களின் பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். மாணவ, மாணவிகள் சிறுபான்மை இன வகுப்பைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பத்துடன் சாதிச்சான்றிதழ் நகல், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், மேற்படிப்பு படித்தால் அதன் நகல், வருமான சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் நகல் ஆகியவை இணைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 15ஆம் தேதிக்குள், "மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், எண். 807,அண்ணா சாலை 5-வது தளம், சென்னை-2" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
Webdunia
Publish Date: Sat, 06 Dec 2008 (11:57 IST)
Updated Date: Sat, 06 Dec 2008 (11:56 IST)