Publish Date: Tue, 11 Nov 2008 (10:39 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:44 IST)
கடந்த அக்டோபர் மாதம் பிளஸ்-2 தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு வரும் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பிளஸ்-2 தனித்தேர்வுகள் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்டன. தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
தேர்வு எழுதிய மையங்களில் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். சுயவிலாசமிட்ட தபால் உறையை ஒப்படைத்த தனித்தேர்வர்களுக்கு (தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் உள்பட) சான்றிதழ் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
சான்றிதழ் பெற்றவர்கள் விரும்பினால் மறுகூட்டல் மற்றும் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அலுவலகம் மற்றும் அனைத்து தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களிலும் கிடைக்கும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நவம்பர் 19 தேதி கடைசி நாளாகும்.
தேசிய திறனாய்வு தேர்வும், என்.எம்.எம்.எஸ். உதவித்தொகை தேர்வும் வருகிற 16ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 200 மையங்களில் நடைபெறுகிறது. தேர்வுக்கான நுழைவுச்சீட்டு நாளை (புதன்கிழமை) வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.
Webdunia
Publish Date: Tue, 11 Nov 2008 (10:39 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:44 IST)