Publish Date: Thu, 06 Nov 2008 (11:45 IST)
Updated Date: Thu, 06 Nov 2008 (11:39 IST)
டிசம்பர் மாதம் நடைபெற உள்ள தனித்தேர்வர்களுக்கான 8-வது வகுப்பு பொதுத் தேர்வுக்கு சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் வரும் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
தனித் தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அடுத்த மாதம் நடக்கிறது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் விண்ணப்பிக்காதவர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்கள் நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, கடலூர் மற்றும் சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் கிடைக்கும்.
சென்னையைச் சேர்ந்தவர்கள் உடனடி அனுமதித் திட்டத்துக்கான கட்டணம் ரூ.500. தேர்வுக்கட்டணம் ரூ.125 ஆகியவற்றைச் சேர்த்து ரூ.625க்கு, தேசிய மயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் ஒரே கேட்பு வரைவோலையாக "அரசுத் தேர்வுகள் இயக்குநர் சென்னை-6' என்ற பெயருக்கு எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து கொடுக்க வேண்டும்.
மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தேர்வுக் கட்டணத்தை அரசு கருவூலத்தில் செலுத்தி, கருவூல செலுத்துச் சீட்டை விண்ணப்பத்துடன் இணைத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் மற்றும் நுழைவுச் சீட்டில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெற வேண்டும் தேர்வெழுதும் மாணவர்கள் டிசம்பர் முதல் தேதியன்று 12 வயது 6 மாதங்கள் பூர்த்தியடைந்தவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நவம்பர் 25ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
தேர்வுக்கான கால அட்டவணை : 1.12.08 (திங்கள்)-மொழிப்பாடம், 2.12.08 (செவ்வாய்)-ஆங்கிலம், 3.12.08 (புதன்)-கணிதம், 4.12.08 (வியாழன்)-அறிவியல், 5.12.08 (வெள்ளி)-சமூக அறிவியல்.
அனைத்து தேர்வுகளும் காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.