Publish Date: Tue, 21 Oct 2008 (12:42 IST)
Updated Date: Tue, 21 Oct 2008 (12:42 IST)
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம் நடத்தி வரும் அஞ்சல் வழி சித்த மருத்துவ பட்டயப்படிப்பு ரத்து செய்யப்படுவதாக அப்பல்கலைக் கழக துணைவேந்தர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
கடந்த கல்வியாண்டில் அஞ்சல் வழி சித்த மருத்துவ பட்டய படிப்பை தொடங்கிய தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம் இதற்கான தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்றும் கல்வி கட்டணம் ரூ.5,000 என்றும் அறிவித்திருந்தது.
இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த சித்த மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் இதனால் சித்த மருத்துவம் தரம் இழந்து விடும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தியதோடு இதனால் போலி மருத்துவர்கள் அதிக அளவில் உருவாகிவிடுவார்கள் என்றும் அஞ்சல் வழி படிப்பை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன், அஞ்சல் வழி சித்த மருத்துவ பட்டயப்படிப்பை ரத்து செய்து அறிவித்துள்ளார்.
அஞ்சல் வழி சித்த மருத்துவ பட்டய படிப்பு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால தடைவிதித்த உயர் நீதிமன்றம், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் அனுமதியில்லாமல் மருத்துவம் தொடர்பான படிப்பை யாரும் தொடங்க கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த வழக்கு முடிவதற்கு முன்னர் இந்தப் படிப்பு ரத்து செயப்பட்டுவிட்டது.