Publish Date: Sat, 11 Oct 2008 (11:50 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தும் தட்டச்சர் தேர்வில், 6ஆம் வகுப்பு படித்தவர்கள் பங்கேற்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர்க் கல்வித் துறை வெளியிட்டுள்ள ஆணையில், "தட்டச்சு இளநிலை தேர்வு எழுத 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற கல்வி தகுதியை, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி அரசு ஆணையிட்டது.
இப்போது பள்ளிகளில் இளவயதிலேயே கணினி பயிற்சிக்கு மாணவர்கள் செல்வதால் அவர்களுக்கு தட்டச்சு பயிற்சி அவசியமாகிறது. இந்த பயிற்சியால் கணினியை திறமையாகவும், வேகமாகவும் இயக்கும் ஆற்றலை பெறுவார்கள்.
இதை கருத்தில் கொண்டு தொழிநுட்ப ஆணையர் சில பரிந்துரைகளை அரசுக்கு அளித்தார். அதை ஏற்றுக் கொண்ட அரசு புதுமுக இளநிலை என்ற தட்டச்சு பிரிவை புதிதாக தொடங்கி உள்ளது. இதில் சேர்ந்து பயிற்சி பெற்று தேர்வு எழுத 6ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
தேர்வின் போது ஒரு நிமிடத்துக்கு 25 வார்த்தைகள் தட்டச்சு செய்தால் போதும். இந்த தேர்வுக்கு 2ஆம் தாள் கிடையாது. குறைந்தபட்சம் 3 மாதம் அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பள்ளியில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும். என்று அரசு ஆணையில் கூறப்பட்டுள்ளது.