Publish Date: Wed, 24 Sep 2008 (18:42 IST)
Updated Date: Wed, 24 Sep 2008 (18:42 IST)
பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனமாக ஆக்ஸ்போர்ட், தற்போதைய இந்தியா தொடர்பான எம்.எஸ்.சி. பாடத்தை தனது பல்கலைக்கழகத்தில் தொடங்கியுள்ளது.
புதியதாகத் தொடங்கப்பட்டுள்ள எம்.எஸ்.சி. பாடத்தில் சேர்ந்துள்ள மாணவர்களின் முதல் பிரிவுக்கான வகுப்புகள் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் பாடம் மொத்தம் 9 மாத காலஅளவைக் கொண்டிருக்கும்.
தகவல் தொழில்நுட்பம், பொருளாதாரத் துறைகளில் இந்தியா அபரீதமாக வளர்ந்து வருவதை அடுத்து, வெளிநாட்டு மாணவர்கள் இடையே இந்தியா குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
அவர்களின் தேவையை கருத்தில் கொண்டு, அதன் அடிப்படையில் தற்போதைய இந்தியா குறித்த இப்பாடத்தை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ளது.
இந்த பாடத்தின் முதலாவது பிரிவு மாணவர்களில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 18 பேர் இடம்பெற்றுள்ளனர்.
பொருளாதார மேதையான பிரதமர் மன்மோகன்சிங் உட்பட நாட்டின் முக்கியத்துறைகளில் பிரபலமாக விளங்கும் பலர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதுதொடர்பான முதுகலை பாடத்தை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.