Publish Date: Wed, 24 Sep 2008 (11:56 IST)
Updated Date: Wed, 24 Sep 2008 (11:56 IST)
ஆசிரியர் தேர்வு வாரியத்தைப் போல் கல்லூரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கும் தனி வாரியம் ஏற்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தலைமையில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி 'அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத அலுவலர்களை நியமிக்க தனி வாரியம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக துணைவேந்தர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது' என்றார்.
முன்னதாக, மாநில உயர்கல்வி குழு ஆலோசனை கூட்டம் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், தமிழ் பாடநூல்களை உருவாக்கிய 16 நூலாசிரியர்கள் பொன்னாடை போர்த்து, பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.