Publish Date: Tue, 09 Sep 2008 (15:10 IST)
Updated Date: Tue, 09 Sep 2008 (15:08 IST)
இந்தியாவில், கல்வி பணம் கொழிக்கும் வர்த்தகமாக மாறி வருவதாக, உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் அகில இந்திய இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் நிரப்பப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தனர். நீதிபதிகள் பி.என்.அகர்வால், ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் அடங்கியோரைக் கொண்ட அமர்வு முன், இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு சார்பில் வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், மருத்துவ இடங்களைப் பற்றிய விவரங்களை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வராமல், மருத்துவக் கல்லூரிகள் மறைத்து விட்டதாகவும், அவை விதிமுறைகளை மீறி விட்டதாகவும் கூறி, அதற்கு வருத்தம் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய நீதிபதிகள், அரசு தரப்பு தகவலின்படி பார்த்தால் நாட்டில் கல்வியானது பணம் கொழிக்கும் வர்த்தகமாகி வருவதை உணர முடிவதாக, வருத்தத்துடன் தெரிவித்தனர்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.