Publish Date: Fri, 05 Sep 2008 (19:12 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (23:11 IST)
கல்வி தொடர்பாக பிரிட்டன் செல்ல விரும்பும் மாணவர்களுக்கு உள்ள விசா தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்கும் வகையிலான கருத்தரங்கம் ஒன்றை பிரிட்டிஷ் கவுன்சில் நடத்துகிறது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் அலுவலகத்தில் 9 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை நடக்கவுள்ள இந்தக் கருத்தரங்கில், பிரிட்டனில் உள்ள கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் கல்விச் சுற்றுலாவிற்காக பிரிட்டன் செல்ல விரும்பும் மாணவர்கள் ஆகியோர் தங்களுக்கான விசாவைப் பெறும் வழிமுறைகள், விசா விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்படும்.
சென்னையில் உள்ள பிரிட்டிஷ் துணைத் தூதரக அதிகாரி சுகி பம்ரா இந்தக் கருத்தரங்கில் பங்கேற்று, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாணவர் விசா விதிமுறைகள், படிப்பதற்கு முன்பும் படிப்பை முடித்த பின்பும் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விளக்கிக் கூறவுள்ளார். மாணவர்கள் தங்களுக்கு உள்ள அடிப்படையான சந்தேகங்கள் முதல் எல்லா சந்தேகங்களையும் நேரடியாக அதிகாரிகளிடம் கேட்டுப் பதில் பெறுவதற்கு இது நல்ல வாய்ப்பு ஆகும்.
பிரிட்டனில் உள்ள கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் பெற்றுள்ள மாணவர்கள், அதற்கான அத்தாட்சியை கருத்தரங்கிற்குக் கொண்டு வந்தால் அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். கருத்தரங்கில் பங்கேற்க அனுமதி இலவசம்.