Publish Date: Thu, 14 Aug 2008 (13:05 IST)
Updated Date: Thu, 14 Aug 2008 (13:04 IST)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் 16ஆம் தேதி நடத்த உள்ள குரூப்-1 பிரதான தேர்வில் கலந்து கொள்ள மேலும் 70 பேருக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக தங்களுக்கு மதிப்பெண்கள் குறைவாக கிடைத்துள்ளன அதனால் பிரதான தேர்வில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்களை பிரதான நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் 70 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.ஜோதிமணி நேற்று அளித்த தீர்ப்பில், வரும் 16, 17ஆம் தேதிகளில் நடக்க இருக்கும் பிரதான தேர்வில் 70 பேரையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். இவர்கள் தங்களுக்குரிய அனுமதிச் சீட்டை இன்று மாலை (வியாழக்கிழமை) 5 மணிக்குள் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த தேர்வு எழுத அனுமதித்ததை அங்கீகாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த பிரதான தேர்வில் இவர்கள் எழுதிய விடைத்தாளை தனியாக சீலிட்ட கவரில் வைத்திருக்க வேண்டும். ஏற்கனவே நடந்த ஆரம்ப கட்ட தேர்வில் எந்தெந்த கேள்வி மற்றும் விடைகளில் குறைபாடுகள் உள்ளது என்பதை இன்று மாலை 5 மணிக்குள் மனுதாரர்கள் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதலை தேர்வாணையம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வழங்கிய கேள்வி விடைகளை தேர்வாணையம் நிபுணர் குழுவிடம் சமர்ப்பித்து ஆராய வேண்டும்.
இவ்வாறு ஆராய்ந்த பிறகு இவர்கள் சரியான பதில் அளித்திருந்தால் அவற்றிற்கு மதிப்பெண் வழங்க வேண்டும். இவர்களது ஆரம்ப கட்ட தேர்வின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்த பிறகு போதிய கட்-ஆப் மார்க் எடுத்திருந்தால் மட்டுமே இவர்கள் எழுதிய பிரதான தேர்வு பேப்பரை திருத்தம் செய்ய வேண்டும்.
இவர்கள் உரிய நேரத்தில் அனுமதிச்சீட்டு பெறாவிட்டாலோ, இவர்கள் கூறும் குறைபாடு உள்ள கேள்வி - விடைகளை சமர்ப்பிக்க தவறினாலோ உரிமை கோர முடியாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இதேபோல் 33 பேர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர் அவர்களுக்கும் இதே தீர்ப்பை உயர் நீதிமனற்ம் வழங்கியுள்ளது.