Publish Date: Thu, 14 Aug 2008 (13:04 IST)
Updated Date: Thu, 14 Aug 2008 (13:01 IST)
இரண்டாம் ஆண்டு இடைநிலை ஆசிரியர் தனித்தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் உடனடி அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இரண்டாம் ஆண்டு ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு 25ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டிருந்த கடைசி தேதியான 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் உடனடி அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் ரூ.1,000 சிறப்பு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் இன்று முதல் 19ஆம் தேதி வரை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் (டயட்) வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 20ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை கல்லூரிச்சாலை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது உடனடியாக நுழைவு சீட்டும் (ஹால்டிக்கெட்) வழங்கப்படும்.
தபால், கொரியர் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். விண்ணப்பத்தை நேரில் மட்டுமே கொடுக்க வேண்டும். உடனடி அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கு சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.