Publish Date: Mon, 11 Aug 2008 (15:51 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:42 IST)
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் தெரிவு முடிவுகளை வெளியிட ஆய்வு செய்தபோது தெரிவு பெற்றவர்கள் சிலரின் சான்றிதழ்கள் முறையாக இல்லாததால் தெரிவு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பல்வேறு துறைகளுக்குத் தேவையான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை தெரிவு செய்வதற்காக சென்னை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து 1:5 என்ற விகிதாச்சாரத்தில் பட்டியல் பெறப்பட்டது.
பட்டியலில் கண்டுள்ளவர்களின் சான்றிதழ்களைச் முதன்மைச் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும் சரிபார்ப்பு செய்தனர். அவர்கள் செய்த சரிபார்ப்பின் அடிப்படையிலும், புதியதாக வெளியிடப்பட்ட அரசாணையின்படியும் தெரிவு முடிவுகள் தற்காலிகமாக தயாரிக்கப்பட்டன.
தெரிவு முடிவுகளை வெளியிட ஆய்வு செய்தபோது தெரிவு பெற்றவர்கள் சிலரின் சான்றிதழ்கள் முறையாக இல்லாமலும், சில சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படாமலும் முன்னுரிமைச் சான்றிதழ்கள் உரிய முறையில் அமையாமலும், கல்வித் தகுதிகள் சிலவற்றை உறுதிசெய்ய இயலாமலும் இருப்பதைக் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே அவர்களின் தெரிவு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
தெரிவு முடிவு நிறுத்தி வைக்கப்பட்ட தெரிவர்களுக்கு தெரிவு நிறுத்தி வைக்கப்பட்ட காரணத்தைத் தெரிவித்து அதனைச் சரிசெய்து அனுப்பத் தகவல்கள் அனுப்பப்படுகின்றன. அவர்கள் நிறுத்தி வைக்கப்பட்ட காரணத்தை நிவர்த்தி செய்த பின் தெரிவு பட்டியல்கள் வெளியிடப்படும்.
அவர்கள் தெரிவின் மீது உரிய முடிவு எடுக்கப்படாமல் முன்னுரிமையில் அடுத்தவர்களைத் தெரிவு செய்யப்படல் நியாயமானதாக அமையாது. எனவே தெரிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நபர்கள் உரிய காரணத்தை நிவர்த்தி செய்யப்படும் போது உடனுக்குடன் அவர்களின் தெரிவு முடிவுகளும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Webdunia
Publish Date: Mon, 11 Aug 2008 (15:51 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:42 IST)