Publish Date: Sat, 09 Aug 2008 (13:13 IST)
Updated Date: Sat, 09 Aug 2008 (13:13 IST)
உயர் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த காலம் மாறி, இன்று விரும்பிய பாடங்களை படிப்பதற்கான பல்வேறு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
படிப்புக்கு நிதி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மாணவர்களுக்கு பல்வேறு கல்விக் கடனுதவிகளை இன்று அளித்து வருகின்றன. அதுபற்றி இங்கு பார்ப்போம்.
ஏறக்குறைய நாட்டில் உள்ள பெரும்பாலான வங்கிகளும் மாணவர்களுக்கு கல்விக் கடன்களை தாராளமாக அளித்து வருகின்றன.
பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க், தேனா வங்கி, பஞ்சாப் நேஷனல் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஆந்திரா வங்கி, பேங்க் ஆப் பரோடா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா, ஹெச்டிஎப்சி வங்கி, ஐடிபிஐ போன்றவை கல்விக் கடன் வழங்கும் முக்கிய வங்கிகளில் சில.
மாணவர்களுக்கு கடன் அளிப்பதற்காக இந்த வங்கிகள் கேட்கும் ஆவணங்கள், வட்டி வீதம், திரும்பச் செலுத்தும் முறை போன்றவை வங்கிகளுக்கு வங்கி சற்று மாறுபடுகிறது. எனினும், எளிதில் கடன் வழங்கும் வகையிலேயே இவற்றின் நடைமுறைகள் தற்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இனி வங்கிகள் அளிக்கும் கடனுதவிகள் பற்றி சுருக்கமாகக் காண்போம்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா:
இவ்வங்கியானது இந்திய குடியுரிமை பெற்ற மாணவர்களுக்கு, உள்நாடு அல்லது வெளிநாட்டில் உயர் கல்வி கற்கத் தேவையான கடனுதவிகளை செய்து தருகிறது. இந்தியாவில் படிப்பதற்கு அதிகபட்சமாக ஒரு மாணவருக்கு ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிப்பதென்றால் ரூ. 20 லட்சமும் இந்த வங்கி கடனாகத் தருகிறது.
இதில் ரூ. 4 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு மாணவர்கள் வங்கியில் முன் தொகை (மார்ஜின்) செலுத்தத் தேவையில்லை. கடன் தொகை ரூ. 4 லட்சத்துக்கும் மேற்பட்டதாக இருக்குமானால், இந்தியாவில் படிப்பதெனில் 5 விழுக்காடும், வெளிநாட்டில் படிப்பதென்றால் 15 விழுக்காடும் முன்தொகையாகச் செலுத்த வேண்டும் (இது அவ்வப்போது மாறுபடலாம்).
ரூ.4 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு ஆண்டுக்கு 12 விழுக்காடு வட்டியும், ரூ. 4 லட்சத்திற்கு மேற்பட்ட தொகைக்கு 13 விழுக்காடு வட்டியும் வசூலிக்கப்படுகிறது (இதில் அவ்வப்போது மாற்றம் இருக்கலாம்).
சம்மந்தப்பட்ட் படிப்பு முடிந்த ஓராண்டுக்குப் பின்னரோ, அல்லது பணி கிடைத்த 6 மாதங்களுக்கு பிறகோ, (இதில் எது முதலில் வருகிறதோ அப்போதில் இருந்து) கல்விக் கடன் தவணைகளை மாணவர்கள் செலுத்தத் தொடங்க வேண்டும். 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் கடன் முழுவதும் செலுத்தும் வகையில், மாதத் தவணை அமையும்.
கல்விக் கடன் வழங்க வங்கிகள் ஆர்வத்துடன் இருப்பதால், உங்கள் அருமாஇயில் உள்ள வங்கி மேலாளரைச் சந்தித்து இதுபற்றி உங்களின் சந்தேகங்களைக் கேட்கலாம்.
(அடுத்ததாக... இந்தியன் ஓவர்சீஸ் வங்கி! )
Webdunia
Publish Date: Sat, 09 Aug 2008 (13:13 IST)
Updated Date: Sat, 09 Aug 2008 (13:13 IST)