Publish Date: Fri, 08 Aug 2008 (12:18 IST)
Updated Date: Fri, 08 Aug 2008 (12:17 IST)
தமிழ்நாடு கல்வி அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்படும் முதலாமாண்டு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையைப் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு கல்வி அறக்கட்டளையின் கெளரவச் செயலாளர் ஆறு.ராமசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இளங்கலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, மருத்துவ, தொழில்நுட்ப பட்டப்படிப்பு ஆகியவைகளில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்று, பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்குள் இருக்கவேண்டும். மாணவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
முதலாமாண்டில் உதவித்தொகை பெற்ற மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் தேறினால் தொடர்ந்து உதவித்தொகையை படிப்பு முடியும் வரை பெறலாம். விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வழங்கப்படும்.
கெளரவச் செயலாளர், தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, ராஜா அண்ணாமலை கட்டடம் (இணைப்பு), 2-வது மாடி, 18/3,ருக்மினி லட்சுமிபதி சாலை, எழும்பூர், சென்னை- 8 என்ற முகவரிக்கு சுயவிலாசமிட்ட உறையில் பத்து ரூபாய் அஞ்சல்தலை ஒட்டி அனுப்பி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி அக்டோபர் 31ஆம் தேதி ஆகும்" என்று கூறப்பட்டுள்ளது.