Publish Date: Wed, 06 Aug 2008 (18:40 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (22:59 IST)
இந்திய அரசின் கல்வி உதவித் தொகையுடன் இந்தியாவில் பட்டப் படிப்பு படிக்க விரும்பும் அயல்நாடுவாழ் இந்திய மாணவர்களுக்கான பொது நுழைவுத் தேர்வு வரும் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெற உள்ளதாக அயல்நாடுவாழ் இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நுழைவுத் தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்ட 40 நாடுகளில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதியாகும். தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்கள் கடந்த 6 ஆண்டுகளுக்குள் 11-வது, 12-வது வகுப்பு அல்லது அதற்குச் சமமான தேர்வை அயல்நாட்டில் படித்து அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது குறைந்தது மூன்றாண்டுகள் அயல்நாட்டில் படித்து இருக்க வேண்டும்.
மேலும் அரசின் கல்வி உதவித் தொகை பெற இந்த மாணவர்களின் குடும்ப மாத வருமானம் 2, 250 டாலருக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஏற்கனவே சுயமாகவோ அல்லது வேறு ஏற்பாட்டின் கீழ் இந்தியாவில் கல்வி பயிலும் மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் படிக்க முடியாது. பட்டபடிப்பில் முதலாம் ஆண்டு தேர்வுக்கான புதிய சேர்க்கைக்கு மட்டுமே மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பொறியியல், வரைகலை, தொழில்நுட்பம், சமூக அறிவியல், லிபரல் ஆர்ட்ஸ், பொருளாதாரம், நிர்வாகம், இதழியல், ஓட்டல் நிர்வாகம், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, அறிவியல்கள், சட்டம் உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு 100 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். கல்வி நிறுவன கட்டணத்தில் 75 சதவீதம் அல்லது 3,600 டாலர்கள், இதில் எது குறைவோ அது வழங்கப்படும். நிறுவன கட்டணத்தில் கல்வி கட்டாயம், விடுதி, பிற கட்டணங்கள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.