Publish Date: Thu, 31 Jul 2008 (13:26 IST)
Updated Date: Thu, 31 Jul 2008 (13:25 IST)
சிவில் நீதிபதி தேர்வுக்கான அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் தேர்வாணையத்தை அணுகி விவரம் பெறலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தேர்வாணையத்தின் சார்பில், சிவில் நீதிபதி (இளநிலை பிரிவு) பதவிக்கு நேரடி நியமனம் செய்ய எழுத்துத் தேர்வு, ஆகஸ்ட் 2, 3ஆம் தேதிகளில் நடக்கிறது. விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுச் சீட்டுகள், நிராகரிப்பு குறிப்பாணைகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டன.
அனுமதிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்களும் (சம்பந்தப்பட்ட தேர்வுக் கூடங்களின் பெயர் உட்பட), நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்களும் (நிராகரிப்புக்கான காரணங்களுடன்) தேர்வாணைய இணையதளத்திலும் (www.tnpsc.gov.in) வெளியாகி உள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பித்து தகவல் ஏதும் இதுவரை கிடைக்கப்பெறாதோர் அவர்களை பற்றிய விவரங்கள் மேற்கண்ட இணையதளத்திலும் இல்லாதிருப்பின், அவர்கள் தேவையான விவரங்களை அறிய இன்றும், நாளையும் தேர்வாணையத்தையோ, சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலரையோ (மாவட்டங்களாக இருப்பின்) அணுகலாம்" என்று கூறப்பட்டுள்ளது.