Publish Date: Mon, 28 Jul 2008 (13:25 IST)
Updated Date: Mon, 28 Jul 2008 (13:24 IST)
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகைப்பெற விண்ணப்பிக்கலாம் என்று தொழிலாளர் நலவாரியம் கூறியுள்ளது.
இது தொடர்பாக தொழிலாளர் நலவாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் சார்பில், உதவித் தொகை, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தொழிலாளர் நலநிதி செலுத்தும் தொழிலாளர்கள், இந்த உதவிகளை பெற விண்ணப்பிக்கலாம். மூக்கு கண்ணாடி, மூன்று சக்கர வண்டி, காது கேட்கும் கருவி, பாடநூல் போன்றவை வாங்குவதற்கும், தையல், தட்டச்சு, கணினி போன்ற பயிற்சி பெறுவதற்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
பொறியியல், மருத்துவம், சட்டம், தொழிற்கல்வி, மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இவை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. இந்த உதவிகளை பெறுவதற்கு தொழிலாளர்களின் மாத சம்பளம் ரூ.10, 000-க்குள் இருக்க வேண்டும். இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
இது பற்றிய மேலும் விபரங்களுக்கு, செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் வாரியம், தபால் பெட்டி எண்-718, சென்னை-6 என்ற முகவரிக்கு சுயவிலாசமிட்ட, தபால்தலை ஒட்டப்பட்ட உறையை அனுப்பி தெரிந்து கொள்ளலாம்" என்று கூறப்பட்டுள்ளது.