Publish Date: Sat, 26 Jul 2008 (13:44 IST)
Updated Date: Sat, 26 Jul 2008 (13:44 IST)
கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித் சிங் பர்னாலா கலந்து கொண்டு 996 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 29-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், டாடா நிறுவனங்களின் தலைவர் ரத்தன் டாடா, ராசி விதைகள் நிறுவன நிர்வாக இயக்குனர் ராமசாமி, மகாராஷ்டிராவில் உள்ள ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ் லிமிடெட் தலைவர் பவர்லால் ஹிராலால் ஜெயின் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டது.
ரத்தன் டாடா விழாவுக்கு வராததால் அவருக்குப் பதிலாக, பாஸ்கர் பட் டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொண்டார். தமிழக காவல்துறை தலைமை ஆய்வாளர் சைலேந்திரபாபுவுக்கு சிறந்த முன்னாள் மாணவருக்கான பட்டத்தையும் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா வழங்கினார்.
இவ்விழாவில், பல்கலைக்கழக இணைவேந்தரும், வேளாண்மைத்துறை அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் பங்கேற்று அறநல்கை வைப்பு நிதி, 'மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் பொருளாதாரம், சுற்று சூழல் நன்மைகளும், செலவினமும் முன்மதிப்பீடும்' என்ற நூலை வெளியிட்டு உரையாற்றினார்.