Publish Date: Sat, 26 Jul 2008 (12:25 IST)
Updated Date: Sat, 26 Jul 2008 (12:24 IST)
தமிழக அரசுப் பணியில் இருக்கும் தட்டச்சர், சுருக்கெழுத்தாளார் ஆகியோர் 2 ஆண்டுகளுக்குள் கணினி கல்வி கற்றால்தான் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழக அரசுத் துறைகளில் தேவையற்ற பணிகளை நீக்குவதற்காக தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, புதிய அலுவலக நிர்வாக முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்களில் தட்டச்சு இயந்திரங்கள் அனைத்தும் மாற்றப்பட்டு கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன. இதனால் பணிகளை மேலும் துரிதப்படுத்தி மக்களுக்கு நல்ல சேவையை அளிக்க முடியும்.
கணினி புகுத்தப்படும் பட்சத்தில் அதைக் கையாள்வதற்கு அரசு ஊழியர்களுக்கு போதிய கணினி அறிவும் திறமையும் அவசியம் தேவைப்படுகிறது. அரசு அலுவலகங்களில் மேலும் அதிக கணினிகளை புகுத்த இருக்கும் நிலையில், தட்டச்சர், சுருக்கெழுத்தாளர் ஆகியோருக்கு கணினி அறிவு நிச்சயம் தெரிந்து இருக்க வேண்டும் என்ற நிலை எழுந்துள்ளது. இது தமிழக அரசுப் பணி, தமிழ்நாடு நீதித்துறைப் பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியில் இருக்கும் தட்டச்சர், சுருக்கெழுத்தாளர் ஆகியோருக்குப் பொருந்தும். இதுதொடர்பாக பல்வேறு அரசு நிறுவனங்களின் ஆலோசனை பெறப்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.
மேற்கூறப்பட்ட பணிகளில் சேரும் தட்டச்சர், சுருக்கெழுத்தாளர் ஆகியோர் தங்களது தகுதி ஆய்வு (பிரோபேஷன்) காலகட்டத்துக்குள், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலம் படித்து (சான்றிதழ் படிப்பு), அது அளிக்கும், 'கணினி ஆன் ஆபீஸ் ஆட்டோமேஷன்' என்ற சான்றிதழை பெற்று, கூடுதலாக தொழில்நுட்பத் தகுதியை வளர்த்திருக்க வேண்டும். ஆனால் இந்தப் பதவிகளில் சேருவதற்காக கணினி கல்வி, கூடுதல் தேவையாக கருதப்பட மாட்டாது.
தொழில்நுட்பக் கல்வித் துறை மூலம் கணினி தகுதியை முன்னதாக பெறாவிட்டாலும், அரசுப் பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம். ஆனால் பணியில் சேர்ந்து விட்டால், தகுதி ஆய்வு (பிரோபேஷன்) காலகட்டத்துக்குள் அந்தத் தகுதியை பெற்றுக் கொள்ள வேண்டும். அதில் தேர்ச்சி பெற்ற பிறகுதான் தகுதி ஆய்வு காலகட்டம் முடிந்ததாக அறிவிக்கப்படும். இல்லாவிட்டால், தமிழக அரசுப் பணிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
யு.ஜி.சி. அல்லது ஏ.ஐ.சி.டி.இ. அல்லது டி.டி.இ. ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் இருந்து கணினி அறிவியல் சம்பந்தப்பட்ட பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்கள், இந்தத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள்.
தற்போது பணியாற்றும் தட்டச்சர், சுருக்கெழுத்தாளர் ஆகியோருக்கு, கணினி அறிவு பெற்றுக் கொள்வதற்கான காலகட்டம் 2 ஆண்டுகள் என்று நிர்ணயிக்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்குள் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மூலம் இந்த சான்றிதழ் படிப்பை முடிக்காவிட்டால், அவர்களுக்கு சம்பள உயர்வு (இன்கிரீமென்ட்) அளிக்கப்படமாட்டாது. கணினி கல்வி பெற்ற பிறகு அவை தரப்படும்.
50 வயதை கடந்த அல்லது 25 ஆண்டுகள் பணி நிறைவடைந்த தட்டச்சர், சுருக்கெழுத்தாளர் ஆகியோருக்கு இந்தக் கல்வியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
Webdunia
Publish Date: Sat, 26 Jul 2008 (12:25 IST)
Updated Date: Sat, 26 Jul 2008 (12:24 IST)