Publish Date: Fri, 25 Jul 2008 (15:15 IST)
Updated Date: Fri, 25 Jul 2008 (15:14 IST)
இந்தியாவில், தமிழகத்தில்தான் பொறியியல் படிப்பவர்கள் அதிகம் என்று சென்னை அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியுள்ளார்.
சென்னையில் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், " தமிழகத்தில் மொத்தம் 349 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 10,000 மாணவ, மாணவிகள் பொறியியல் படித்து பட்டதாரிகளாக வெளிவருகிறார்கள். இந்தியாவில், தமிழகத்தில்தான் பொறியியல் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.
பொறியியல் படிப்பை பொறுத்தவரை, மாணவர்கள் 4 ஆண்டுகள் கடினமாக படித்தால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிக அளவு சம்பளமும் கிடைக்கும். அதனால்தான் பல மாணவர்கள் மருத்துவப் படிப்பை விட்டுவிட்டு பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கிறார்கள்.
மாணவர்கள் எந்த படிப்பு படித்தாலும் அவர்களுக்கு வெறும் புத்தக அறிவு மட்டும் போதாது. படித்தவற்றை எடுத்துக்கூறும், நிர்வகிக்கும் திறமை தேவை. மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு ஏற்ற திறமையை பள்ளிகளிலேயே ஆசிரியர்கள் வளர்க்கவேண்டும். அவ்வாறு செய்தால்தான் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து படிக்கும் போதும் அந்த திறமை வளர்த்து வேலைவாய்ப்பு பெற முடியும்" என்றார்.
======