Publish Date: Thu, 24 Jul 2008 (16:00 IST)
Updated Date: Thu, 24 Jul 2008 (15:59 IST)
துணை மருத்துவப் படிப்புகளான பி.எஸ்ஸி நர்சிங், பி.ஃபார்ம்., பி.பி.டி. (ஃபிஸியோதெரப்பி) உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான கல்வித்தகுதி குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
பி.எஸ்ஸி. (நர்சிங்), பி.பி.டி. (ஃபிஸியோதெரப்பி), பி.ஓ.டி. (ஆக்குபேஷனல் தெரப்பி) ஆகியவற்றில் சேர மேல்நிலைப் படிப்பில் வேதியியல், இயற்பியல், உயிரியல் பாடங்களை படித்திருக்க வேண்டும்.
பி.ஃபார்ம். படிப்புக்கு மட்டும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பி.எஸ்ஸி. (நர்சிங்) படிப்பில் சேருவதற்கான அதிகபட்ச வயதை 30ஆக அதிகரித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இருந்தபோதிலும், நர்சிங் படிப்பில் சேருவோர் மாணவராக இருந்தாலும், மாணவியராக இருந்தாலும் திருமணமானவராக இருக்கக் கூடாது. கல்லூரியில் சேர்ந்த பிறகு திருமணம் செய்தாலும் கூட கல்லூரியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
9 மாணவிக்கு ஒரு மாணவர் என்ற விகித அடிப்படையில் பி.எஸ்ஸி. நர்சிங் படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று தகவல் விளக்கக் குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் படிப்புகளில் சேர அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஜூலை 16ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 30ஆம் தேதி கடைசி நாளாகும்.