Publish Date: Wed, 23 Jul 2008 (13:12 IST)
Updated Date: Wed, 23 Jul 2008 (13:11 IST)
அரசு சட்டக்கல்லூரிகளுக்கு 16 விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
அரசு சட்டக்கல்லூரிகளில் 16 விரிவுரையாளர்களுக்கான காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு எழுத்து தேர்வும் நடத்தப்பட்டது.
கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதை எதிர்த்து ஜீவரத்தினம் என்பவர் உள்பட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 22 பேரும் குறிப்பிட்ட பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெறவில்லை. முதுகலைப் பட்டம் பெறாதவர்களை விரிவுரையாளர்களாக தேர்ந்தெடுப்பது தவறு என்றும் ஆனால், குறிப்பிட்ட பாடத்தில் முதுகலை பட்டம் பெற்ற எங்களை நேர்முகத்தேர்வுக்கு அழைக்காதது தவறு என்றும் மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பல்கலைக்கழக மானியக்குழு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதில் விண்ணப்பதாரர்கள் விரிவுரையாளர் பதவிக்கு குறிப்பிட்ட பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த உத்தரவை அரசு விலக்க முடியாது.
ஆகவே, இந்த பதவிக்கு முதுகலை பட்டப்படிப்பு குறிப்பிட்ட பாடத்தில் படிக்க தேவையில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. ஆகவே, இந்த தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது. பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளுக்கு ஏற்ப அரசு திருத்தங்களை கொண்டு வந்து அதன் அடிப்படையிலேயே விரிவுரையாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.