Publish Date: Fri, 18 Jul 2008 (17:20 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:00 IST)
சென்னை: அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர் மற்றும் மாணவர்களுக்கு விரைவில் 'ஸ்மார்ட் கார்ட்' எனப்படும் மின்னணு அட்டை வழங்கப்படும் என்று அதன் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கான புத்தகக் கண்காட்சியை அவர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மன்னர் ஜவஹர், ஆர்.எப்.ஐ.டி. எனப்படும் இந்த மின்னணு தகவல் அட்டை சம்மந்தப்பட்டவரின் பெயர், முகவரி, எந்தத் துறையைச் சேர்ந்தவர், ரத்த வகை உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும் என்றார்.
இந்த அட்டையின் மூலம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வருவோரின் நேரம், அவர் வெளியில் செல்லும் நேரம் ஆகியவை பதிவாகிவிடும் என்ற அவர், இதுவரை இந்த அட்டை 20 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
விரைவில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் இது வழங்கப்படும் என்ற மன்னர் ஜவஹர், முதல் கட்டமாக ஆசிரியர்களுக்கு இது தரப்படும் என்றார்.