Publish Date: Fri, 18 Jul 2008 (16:57 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:00 IST)
தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவரின் பணியை நீடிப்பது தொடர்பான மனுவை பரிசீலனை செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்த முன்னாள் தலைமை ஆசிரியர் பி.வேலுசாமி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தேசிய நல்லாசிரியர் விருதை பெற்றவர்களின் உடல்திறன், மனநிலை ஆகியவற்றின் அடிப்படையில், அவர்கள் ஓய்வு பெற்ற தேதியில் இருந்து 5 ஆண்டுக்கு பதவியை நீட்டிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
நான் கடந்த 2004- 05 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் தேசிய விருதை 2007-ஆம் ஆண்டில் பெற்றேன்.
கடந்த மே மாதம் 31-ஆம் தேதி நான் பணி ஓய்வு பெற்றேன். அரசின் 1976-ஆம் ஆண்டு உத்தரவுப்படி 5 ஆண்டு பதவியை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.
ஆனால், பள்ளி கல்வி இயக்குனரால் எனது மனு நிராகரிக்கப்பட்டது. அவரது உத்தரவை ரத்து செய்து எனக்கு பதவி நீட்டிப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி பால் வசந்தகுமார், மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தது தவறு என்று தீர்ப்பளித்தனர்.
மேலும், உரிய சான்றிதழ்களுடன் பள்ளி கல்வி இயக்குனரிடம் ஆசிரியர் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும், அதனை 2 வாரங்களில் பரிசீலித்து அரசு உத்தரவிட வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.