Publish Date: Thu, 17 Jul 2008 (11:42 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:00 IST)
சென்னை: எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் வரும் 21-ஆம் தேதி முதல் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் வசந்தி கூறுகையில், நேரடியாக 8-ஆம் வகுப்பு தேர்வு எழுதுபவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் பொதுத் தேர்வு நடைபெற இருப்பதாகவும், டிசம்பர் 1-ஆம் தேதி 12 வயது பூர்த்தியடைந்தவர்கள் இதை எழுத தகுதி உடையவர்கள் என்றும் தெரிவித்தார்.
விண்ணப்பத்துடன் வயதை நிரூபிப்பதற்காக பிறப்புச் சான்றிதழின் நகலை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற தெரிவித்த வசந்தி, 2005- 06-ஆம் கல்வியாண்டில் அறிமுகமாகி தற்போது அரசு பள்ளிகளில் நடைமுறையில் உள்ள பாடத் திட்டத்தின்படி தேர்வுகள் நடைபெறும் என்றார்.
எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு விண்ணப்பத்திற்கான கட்டணம் ரூ. 125 ஆகும். இதனை அனைத்து அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்களில் வரும் 21-ம் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசித் தேதி ஆகஸ்ட் 20-ஆம் தேதியாகும் என்று இயக்குனர் வசந்தி தெரிவித்தார்.