Publish Date: Tue, 09 Apr 2024 (15:46 IST)
Updated Date: Tue, 09 Apr 2024 (15:56 IST)
நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஆலங்குளத்தில் பிரசாரம் செய்வதற்காக தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அம்பை அருகே இடைக்கால் பகுதியில் சோதனை செய்துகொண்டிருந்த பறக்கும்படை அதிகாரிகள், திடீரென நயினார் நாகேந்திரனின் காரை நிறுத்தினர். பின்னர் அவரது கார் மற்றும் பிரசார வாகனத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நயினார் நாகேந்திரனின் ஓட்டல் மேலாளரிடம் அண்மையில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.