Publish Date: Tue, 03 Nov 2009 (12:01 IST)
Updated Date: Tue, 03 Nov 2009 (12:00 IST)
சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக, எப்.எம். ரேடியோக்கள் மூலம் அறிவிப்பு செய்யப்படும் புதிய முறையை கூடுதல் ஆணையர் (போக்குவரத்து) ஷகில் அக்தர் தொடங்கி வைத்தார்.
சென்னை நகரில் வாகன ஓட்டிகளின் பெருக்கத்தால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே போகிறது. சிக்னல்கள் இருந்தும், மேம்பாலங்கள் இருந்தும் கூட, சில முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இந்த நிலையில், சென்னை நகரில் சில முக்கிய இடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து வாகன ஓட்டிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் வசதியை எப்படி செய்வது என்று போக்குவரத்து காவல்துறையினர் சிந்தித்து வந்தனர்.
அதன்படி, தற்போது, கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் செல்பேசியில் உள்ள ரேடியோவில் எப்.எம். மூலம் பாடல்களை கேட்டபடியே பயணம் செய்கிறார்கள்.
எனவே இந்த எப்.எம். ரேடியோக்கள் மூலம் போக்குவரத்து நிலவரங்களை வாகன ஓட்டிகளிடம் விரைவாக எடுத்து செல்லலாம் என்று போக்குவரத்து காவல்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, சென்னையில் போக்குவரத்து நெரிசலை பொதுமக்களிடம் தெரிவிக்க புதிய திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஷகில் அக்தர் நேற்று தொடங்கி வைத்தார்.
இது குறித்து அவர் பேசுகையில், சென்னை நகரில் பல்வேறு காரணங்களால் சாலையில் ஊர்வலம், பொதுக்கூட்டம், தொடர் ஓட்டம், சாலைமறியல் போன்றவை அடிக்கடி ஏற்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். பல நேரங்களில் போக்குவரத்து தடம் வேறு வழியாக திருப்பி விடப்படுகிறது.
இது தவிர சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறும் போதும் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. சென்னை குடிநீர் வடிகால்வாரியம், மின் துறை, தொலைபேசிதுறை போன்ற சேவை துறைகளினால் சாலை பணி மேற்கொள்ளப்படும்போதும் போக்குவரத்து அந்த பாதையில் பாதிக்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்களிடம் முன் அறிவிப்பு செய்தால் இந்த சிக்கல் ஓரளவுக்கு குறையும்.
சென்னையில் எந்தெந்த இடங்களில் வாகன நெரிசல் இருக்கிறது என்பதை போக்குவரத்து காவல்துறையினர் சென்னையில் 13 எப்.எம். நிறுவனங்களுக்கு எஸ்.எம்.எஸ். செய்தியாக அனுப்பி விடுவார்கள். போக்குவரத்து நெரிசல் குறித்து எப்.எம். ரேடியோக்களில் உடனடியாக அறிவிப்பு செய்யப்படும். இதனால் எங்கெங்கு வாகன நெரிசல் இருக்கிறது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொண்டு வேறு பாதை வழியாக செல்லலாம்.
விரைவில், போக்குவரத்து நிலவரங்களை பொதுமக்கள் தங்களது செல்போனிலேயே தெரிந்து கொள்ள புதிய திட்டம் அமல்படுத்தப்படும். போக்குவரத்து காவல்துறையினர் இந்த தகவல்களை எஸ்.எம்.எஸ்.மூலம் அனுப்புவார்கள் என்றும் அவர் கூறினார்.