Publish Date: Wed, 09 Jul 2008 (13:52 IST)
Updated Date: Wed, 09 Jul 2008 (13:52 IST)
விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியை இயக்கும் இயக்குநருக்கும், அதில் நடிக்கும் நடிகருக்கும் வெடிகுண்டு பார்சல் வந்துள்ளது.
விஜய் டி.வி.யில் `லொள்ளு சபா' என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் சாமிநாதன் சென்னை கே.கே. நகரில் வசிக்கிறார். இவருக்கு நேற்று தபாலில் ஒரு பார்சல் வந்துள்ளது. அதில் திருவாவடுதுறையில் இருந்து சித்தார்த் என்பவர் அனுப்பியிருப்பதாக முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த பார்சலை சாமிநாதன் பிரித்துப் பார்த்தார். அதில் வெடிகுண்டு போல பேட்டரியில் வயர்களால் இணைக்கப்பட்டிருந்தது. அதனை வெளியே கொண்டு வந்து போட்டுவிட்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்களும் அதனை பரிசோதித்தனர். ஆனால் அது பட்டாசுகளுடன் இணைக்கப்பட்டிருந்தது.
சாமிநாதனை பயமுறுத்துவதற்காக இந்த வெடிபொருளை பார்சலில் அனுப்பியுள்ளனர் என்றும், இதனால் ஆபத்து எதுவும் இல்லை என்றும் வெடிகுண்டு நிபுணர்கள் கூறினார்கள்.
இதேப் போன்றதொரு பார்சல், சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் விஜய் டி.வி. அலுவலகத்திற்கும் நேற்று மாலை வந்தது. இந்த பார்சல் விஜய் டி.வி.யில் `லொள்ளு சபா' நிகழ்ச்சியை இயக்கி வரும் ராம்பாலா பெயருக்கு வந்திருந்தது. சித்தார்த் என்பவர்தான் இந்த பார்சலையும் அனுப்பியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தனிப்படை காவல்துறையினர் திருவாவடுதுறைக்கும் விசாரணைக்காக விரைந்துள்ளனர்.
புகைப்படம் : நன்றி தினத்தந்தி