Publish Date: Sat, 28 Jun 2008 (12:37 IST)
Updated Date: Sat, 28 Jun 2008 (12:37 IST)
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிம்ரன் திரை தொடரில் ஐந்தாவதாக ஒளிபரப்பாக இருப்பது நவவெள்ளி குறுந்தொடர்.
ஜெயா டி.வி.யில் இந்த தொடர் வரும் திங்கட்கிழமை முதல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகத் தொடங்குகிறது.
தீயவைகளை அழிக்கவும், நல்லவைகளை விதைக்கவும் மக்களுக்கு நம்பிக்கையளிக்க அம்மன் ஆதிபராசக்தி நடத்தும் திருவிளையாடல்களின் தொகுப்புதான் நவவெள்ளி தொடர்.
ஆதிபராசக்தியைப் போலவே தானும் உலகை ஆளும் சக்தியாக அவதாரமெடுக்க நினைத்த ஒரு அற்ப மனிதனின் கதை இது. ஒரு சாதாரண மனிதன் தெய்வ ரகசியத்தை தெரிந்து கொண்டு உலகை ஆளும் சக்தியை தன் வசமாக்கிக்கொள்ள நினைக்கிறான். அம்மன் தனது தீவிர பக்தையான உமா மகேஸ்வரியின் மூலமும், அவளுடைய மகளான காயத்ரி தேவியின் அம்சமாக வெளிப்பட்டும் தனது சக்தியை நிரூபித்து மமதை பிடித்த அந்த மனிதனை எப்படி அடக்குகிறாள் என்பதை புதுமையாகச் சொல்கிறது `நவவெள்ளி' தொடர்.
சிம்ரன் சினிமாவில் கூட செய்திராத அம்மன் வேடத்தை சின்னத் திரையில் ஏற்றிருக்கிறார். அதோடு இந்தத் தொடரில் 14 வேடங்களிலும் வருகிறார்.
தொடரில் சிம்ரன், பூவிலங்கு மோகன், ஓ.ஏ.கே.சுந்தர், அனுராதா கிருஷ்ணமூர்த்தி, சுப்புலட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.