Publish Date: Sat, 23 Oct 2010 (16:42 IST)
Updated Date: Sat, 23 Oct 2010 (16:41 IST)
ஹம்பி (Hampi) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஒரு சுற்றுலா நகரம். மனிதன் தான் கண்ட கனவுகளை கல்லில் செதுக்கினால் எப்படி இருக்கும், கல்லிலே கலை வண்ணம் கண்டான் என்ற பாடலுக்கும் சொந்தமான ஊர் என்றால் அது ஹம்பிதான்.
விஜயநகரப் பேரரசின் தலைநகரமான விஜயநகரத்தில் தற்போது மிஞ்சியிருப்பது ஹம்பிதான். இந்த நகரம் இன்றும் ஒரு முக்கியமான சமயச் சிறப்பு வாய்ந்த இடமாகத் திகழ்கிறது.
ஹம்பி ஒரு நல்ல சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள விருபக்ச கோயிலும், மற்ற இந்துக் கோயில்களும் வேறு எங்கும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டிருக்கும். கட்டடக் கலையின் பூர்வீகம் என்று கூட ஹம்பியைக் கூறலாம். இதில்லாமல் பல்வேறு நினைவுக் சின்னங்களையும் தன்னகத்தேக் கொண்டு மிகவும் புகழுடன் விளங்குகிறது இந்நகரம்.
இப்பகுதியை யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாக அறிவித்துள்ளது. பொதுவாக விஜயநகரத்தின் நினைவுச் சின்னங்கள் பலவும், இந்த ஹம்பியின் பல்வேறு பகுதிகளில் பரந்து விரிந்து கிடக்கிறது. ஒருவர் ஹம்பிக்கு சுற்றுலா சென்று இவை அனைத்தையும் பார்த்துவிட்டு வர வேண்டும் என்றால் அங்குள்ள சுற்றுலா ஆலோசகர்களின் உதவியை நாடுவது மிகவும் நல்லது. அப்போதுதான் அவை அனைத்தையும் பார்க்க முடியும்.
ஹம்பியில் பார்க்க வேண்டிய இடங்கள் என்றால் அவை, கடலெகளு கணேசா, அரச மண்டபம், ஹேமகூடா மலைகள், விருபாட்சர் கோயில், சசிவெகளு கணேசா, ஜலாந்தர சிவலிங்கம், ஹம்பி பஜார், லட்சுமி நரசிம்ஹர், யானைக் கொட்டில், தாமரை மஹால், ஹஜாரா ராமச்சந்த்ரா கோவில், புஷ்கரிணி, விட்டலா கோவில் ஆகியவைதான்.
மேலும் இதில் தொல்லியல் அருங்காட்சியகமும் அடங்கும். கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹம்பியில் அமைந்துள்ள இந்த தொல்லியல் அருங்காட்சியகத்தில், விசயநகரத்தோடு தொடர்புடைய பல அரிய சிற்பங்களும், நினைவுச் சின்னங்களும் இடம்பெற்றுள்ளன. தொடக்கத்தில் இங்கு கிடைத்த சிற்பங்களும், கட்டிடக் கூறுகளும் பிரித்தானிய அதிகாரிகளால் யானைப் பந்திகளில் சேகரித்து வைக்கப்பட்டன. இந்திய தொல்லியல் ஆய்வகம் தனது முதல் அருங்காட்சியகத்தை இங்கு அமைத்தது. 1972 ஆம் ஆண்டில், இவ்வாறான தொல்பொருட்கள் கமலாப்பூரில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டன. தற்போது இந்த அருங்காட்சியகம் நான்கு காட்சிக்கூடங்களைக் கொண்டதாக உள்ளது. இந்த அருங்காட்சியக வாயிலில் விஜயநகரப் பேரரசின் புகழ் பெற்ற பேரரசரான கிருஷ்ணதேவராயர், அவரது அரசிகளினதும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
முதல் காட்சிக்கூடத்தில் சைவ சமயத்துடன் தொடர்புடைய சிற்பங்கள் உள்ளன. வீரபத்திரர், வைரவர், பிட்சாடனமூர்த்தி, மகிசாசுரமர்த்தனி, சக்தி, கணேசர், கார்த்திகேயர், துர்க்கை போன்ற கடவுளரின் சிற்பங்கள் இவற்றுள் அடங்குகின்றன. ஒரு கோயிலைப் போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள நடுக்கூடம் சிவலிங்கம், நந்தி, வாயில் மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இரண்டாம் காட்சிக்கூடத்தில், ஆயுதங்கள், செப்பேடுகள், சமயத் தேவைகள் தொடர்புடைய உலோகப் பொருட்கள், பித்தளைத் தட்டுகள் போன்ற பலவகையான அரும்பொருட்கள் உள்ளன. இவற்றோடு, விசயநகரக் காலத்தைச் சேர்ந்த செப்பு நாணயங்களும், பொன் நாணயங்களும் இந்தக் காட்சிக்கூடத்தில் உள்ளன.
பல்வேறு அகழ்வாய்வுகளில் கிடைத்த முந்திய காலத்தைச் சேர்ந்த பல அரும்பொருட்களும், மத்திய கால நடுகற்கள், சாந்தினாலான உருவங்கள், இரும்புப் பொருட்கள் போன்ற அரும்பொருட்களும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
நமது பாரம்பரிய நினைவுச் சின்னங்களை அழியாமல், எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும் வகையில் ஹம்பியை மிகவும் பாதுகாப்போடு பராமரித்து வருகிறது இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம். இந்தியாவில் தற்போது இருக்கும் ஒரே சிதிலமான புராண கால நினைவு நகரம்தான் ஹம்பி.
நாம் காணும் பல இடங்கள் சிதிலமானதாக இருந்தாலும், அதில் பொதிந்திருக்கும் கலைகள் எந்த விதத்திலும் சேதமாகவில்லை. நம் கண் முன் தோன்றுவது வெறும் கற்கள் அல்ல.. பல வரலாற்று உண்மைகளின் பதிவுகள் என்று எண்ணத் தோன்றும். எத்தனையோ நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், இந்த காலத்தில் இப்படியான தளங்களை உருவாக்க முடியுமா? அதற்கான வாய்ப்பு யாருக்கேனும் அமையுமா என்பது சந்தேகமே...
உலகையே சுற்றி வந்தாலும், ஹம்பியை பார்த்த திருப்தி வராது என்றேக் கூறலாம். பல்வேறு சமயக் கோயில்கள், அது அதற்கான நேர்த்தியுடன் அமையப்பட்டிருப்பதும், கலையும், கடவுளும் ஒருங்கேக் காணக் கூடிய வாய்ப்பும் ஹம்பியில் மட்டுமே நமக்கு கிட்டும் என்று எண்ணுவோம்.
ஹம்பிக்கு நீங்கள் சென்றாலும், நீங்கள் கண்ட ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் ஒவ்வொரு கட்டுரைகளை எழுதுவீர்கள். அவ்வளவு அற்புதமான தளங்களை ஒருங்கே பெற்று ஆனாலும் மெளனமாக நிற்கிறது ஹம்பி.
சுற்றுலா செல்வதற்கு
ஹம்பிக்கு சுற்றுலா செல்வது என்றால், முதலில் நீங்கள் முடிவு செய்ய வேண்டியது, ஹம்பியில் எங்கு துவங்கி, எங்கு உங்களது சுற்றுலாவை நிறைவு செய்யப் போகிறீர்கள், எத்தனை நாட்கள் தங்கி ஹம்பியை சுற்றிப் பார்க்கப் போகிறீர்கள், ஹம்பியில் நீங்கள் காண விரும்பும் விஷயம் என்ன? இவற்றை முடிவு செய்து கொண்டால் உங்களது சுற்றுலாவை நீங்கள் சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம்.
ஹம்பியில் உள்ளூர் பேருந்து மூலம் சென்று இறங்கியதும் நடந்தும் சுற்றுலா தளங்களைக் காணலாம். அல்லது இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டும் செல்லலாம். ஆட்டோக்களை வாடகைக்கு அமர்த்திக் கொண்டும் செல்லலாம். சில இடங்களில் மலையேற்றம் செய்ய வேண்டி வரலாம். எனவே சைக்கிளை எடுத்துக் கொண்டால் பொதுவாக வசதியாக இருக்கும்.
ஹம்பியில் அனைத்து இடங்களையும் காண வேண்டும் என்றால் 2 நாட்களை அதற்காக ஒதுக்குங்கள். அதுவே உங்களை ஹம்பியின் அனைத்து இடங்களையும் பார்த்த திருப்தியைத் தரும்.
Webdunia
Publish Date: Sat, 23 Oct 2010 (16:42 IST)
Updated Date: Sat, 23 Oct 2010 (16:41 IST)