பீபி கா மக்பாரா - தாய் பாசத்தின் சின்னம்!
Publish Date: Fri, 23 Sep 2011 (17:28 IST)
Updated Date: Wed, 02 Jul 2008 (20:02 IST)
இவ்வுலகில் காதலின் சின்னம் எது என்று கேட்டால், அதற்கு பதில் தெரியாத எவரும் வாலிபத்தைக் கடந்தவராக இருக்க முடியாது.ஆம். தனது காதல் மனைவி மும்தாஜ் பேகத்திற்கு முகலாய பேரரசர் ஷா ஜஹான் எழுப்பிய அந்த காதல் கோயிலை, தாஜ் மஹாலை காணாதவர் இருக்கலாம். அறியாதவர் யார்?
ஆனால் தனது தாயின் மீது கொண்ட பாசத்தால் மகன் கட்டிய பாசச் சின்னம் ஒன்று நமது நாட்டில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதுவும் முகலாய வம்சத்தில் வந்ததொரு இளவரசன் கட்டியது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா?தாஜ் மஹாலைப் போல அதுவும் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் நமது நாட்டின் பாரம்பரிய சின்னம் என்பது உங்களுக்குத் தெரியுமா?ஆம், அசப்பில் தாஜ் மஹாலைப் போன்றே தோற்றமளிக்கும் இந்தப் பளிங்குக் கோயில்தான் அது.பீபி கா மக்பாரா என்றழைக்கப்படும் இந்த தாய்ப் பாசத்தின் சின்னத்தை கட்டியது அசம் கான் என்ற இளவரசர்.
மொகலாய பேர்ரசர்களில் மிகக் கொடுமையானவர் என்று வரலாற்றில் வர்ணிக்கப்படும் ஒளரங்கசீப்பின் மனைவி தில்ராஸ் பானோ பேகத்திற்குப் பிறந்த அசம் கான், தன் தாயின் மீது கொண்ட பாசத்தினை வெளிப்படுத்தக் கட்டிய இச்சின்னம் மராட்டிய மாநிலம் ஒளரங்காபாத்தில் உள்ளது. 1651-61ஆம் ஆண்களில் கட்டி முடிக்கப்பட்டது.
அழகிய சூழலில் அமைந்துள்ள இதன் மையத்தில் தில்ராஸ் பானோ பேகத்தின் கல்லறை உள்ளது. தாஜ் மஹாலைப் போலவே கட்டப்பட்டுள்ளதால் இதனை அதன் சிறிய பிரதிபலிப்பு என்று கூறுவார்கள்.
மாலைப் பொழுதில் இவ்விடத்திற்கு செல்வது மனதிற்கு இதமான அனுபவம்.